கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து, ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். கொரோனா பரவல் குறைய தொடங்கிய பிறகு, பாதி நாட்கள் அலுவலகத்திலும் பாதி நாட்கள் வீட்டிலுமாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், வாரத்தின் 5 நாட்களும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டி உத்தரவிட்டுள்ளது.வீட்டிலிருந்து பணி செய்வது வசதியாக உள்ளதாக பல்வேறு ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “வீட்டிலிருந்து பணி செய்வதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக, வழிகாட்டுதல், குழுவாக பணி செய்தல், ஒத்துழைப்பு போன்றவற்றில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் செயல்திறனில் தேய்வு காணப்பட்டுள்ளது. எனவே, ஊழியர்கள் அலுவலகம் வந்து பணி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்” என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், கட்டாயமாக அனைத்து நாட்களும் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.