இந்தியர்களின் அன்றாட உணவில் தேநீர் மற்றும் மஞ்சள் தவறாமல் இடம்பெறுகிறது. இவை இரண்டும் கொரோனா பாதிப்பை குறைக்க உதவியுள்ளதாக ஐ சி எம் ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில், மக்கள் தொகை மிகவும் குறைவு. அதே வேளையில், மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் 5 - 8% மட்டுமே கொரோனா இறப்பு விகிதம் பதிவானது. இதற்கான முக்கிய காரணமாக, இந்தியர்களின் உணவு முறை சொல்லப்பட்டுள்ளது. இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவையாக இந்திய உணவு பழக்கம் உள்ளது. மேலும், பெரும்பாலான இந்தியர்கள், தினசரி தேநீர் பருகுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன், மஞ்சள் சேர்க்காத இந்திய உணவுகள் இல்லை. எனவே, இந்தியாவில், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக பதிவானதற்கு உணவு பழக்கம் காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்தியா, பிரேசில், ஜோர்டான், சுவிட்சர்லாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில், கொரோனா பாதிப்பு குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரியவந்துள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின், சார்ஸ் மற்றும் கோவிட் வைரஸ் களின் தீவிரத் தன்மையை குறைக்க முக்கிய பங்கு வகித்ததாக ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேற்கத்திய நாடுகளில், சிவப்பு இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு அதிகமாக காணப்பட்டதால், இறப்பு விகிதம் உயர்வாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.