தேஜஸ் 2.0 போர் விமான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேஜஸ் 2.0 போர் விமான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் 123 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் வழங்கி உள்ளது. இதில் 30 விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் தேஜஸ் மார்க் 2 மாதிரி விமானம் தயாராகி விடும் என்றும் வரும் 2030-ல் உற்பத்தி தொடங்கும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறுகையில், விமானப் படையில் பழைய போர் விமானங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன. தற்போது 30 தேஜஸ் ரக விமானங்கள் படையில் உள்ளன. தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானங்கள் சேர்க்கப்படும்போது படையின் வலிமை மேலும் அதிகரிக்கும். மேலும், போர் விமானங்கள் எல்லைப் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
விமானப்படை தினம் செப்டெம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 10 ருத்ரா ஹெலிகாப்டர்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.