மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. அதற்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது, அவற்றில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தலும், வர்த்தக தடை விதிப்பதும் அடங்கும். பாகிஸ்தான் இதற்கு பதிலாக, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனையை நடத்தினார். இந்த பரபரப்பான நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த ஒத்திகையில், முக்கிய இடங்களில், அவற்றில் ராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலைத் தொடங்கக்கூடிய சூழ்நிலையில், இந்த பாதுகாப்பு ஒத்திகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி இன்று மீண்டும் அவசர ஆலோசனை நடத்தினார். இதில், பாதுகாப்பு ஒத்திகை, பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை தமிழகத்தில், சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கத்தில் ஒத்திகைகள் நடைபெற உள்ளன. நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த ஒத்திகை நடைபெறும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.