எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகன தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, டெஸ்லா நிறுவனத்தின் இந்த ஆலை குஜராத் மாநிலத்தில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில், எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, டெஸ்லா ஆலை இந்தியாவில் அமைக்கப்படுவது உறுதியானது. தற்போது, குஜராத் மாநிலத்தில் இது அமைக்கப்பட உள்ளது தெரியவந்துள்ளது. வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ள குஜராத் மாநாட்டில் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது. அந்நிறுவனத்தின் நெக்ஸான் வாகனம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், டெஸ்லா வருகையால் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையின் போக்கு மாறும் என கருதப்படுகிறது.














