நாட்டில் முதல் முறையாக நொய்டாவில் ட்ரோன்கள் மூலம் ரத்த மாதிரிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பரவல் ஏற்பட்ட சமயத்தில் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல ஐ-ட்ரோன் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரி ஆகியவற்றிலிருந்து குறைந்த வெப்ப நிலையை பராமரிக்கும் பெட்டியில் வைத்து ஐ-ட்ரோன் மூலம் 10 யூனிட் ரத்தம் கொண்டு செல்லப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை நொய்டாவில் உள்ள ஜேபி தகவல் தொழில்நுட்ப மையம் செய்திருந்தது. இதற்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
தொலைதூர பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ரத்தத்தை சரியான நேரத்தில் விநியோகிப்பதில் பல சவால்கள் உள்ளன. ட்ரோன் மூலம் ரத்தத்தை விநியோகிப்பது, போக்குவரத்து நேரத்தை வெகுவாக குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














