மிச்சாங் புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் பாடப்புத்தகங்கள் சேதம் அடைந்துள்ளன.
சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் வீடுகளில் வெள்ளம் புகுந்து உடைமைகள், பொருட்கள் என அனைத்தும் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து படிப்படியாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ள நீர் வடிவ தொடங்கியது. மக்கள் இயல்பு நிலைக்கு தற்போது திரும்பி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பள்ளிகளை திறக்க இயலவில்லை. மேலும் மாணவர்களின் பாடப்புத்தகம் நோட்டு புத்தகம் போன்றவை சேதம் அடைந்துள்ளன. இதற்காக புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றிய விவரங்கள் எடுக்கப்பட்டன .அதில் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி சென்னை மாவட்டத்தில் 12000 மாணவர்களின் பாட புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம், 3000 பேரின் பைகள் சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து நேற்று முதல் இவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.