இலக்கியம் என்பது கற்றறிந்த மேதைகள் கவிப்புலமையோடு எழுதிய பாடல் வரிகள் மட்டுமே என்றுதான் பலரும் நினைத்து வருகிறோம். ஆனால், மண்ணில் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே ஒரு இலக்கிய வடிவம் இருந்தது என்றால் அது "தாலாட்டு" தான். உலகின் முதல் இலக்கியமே "எழுதா இலக்கியம்" என்று கூறப்படும் "தாலாட்டு" இலக்கியமாகும்.
தாலாட்டு என்பது தால் + ஆட்டு என்று பிரிந்து பொருள் படும். தால் என்றால் நாக்கு. குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும், தாய் தன் இதழ்களைக் குவித்து, நாவை ஆட்டி பாடுவதற்கு 'தாலாட்டு' என்று பெயர் வந்தது. தாலாட்டுக்கள் வாய்மொழி இலக்கியங்களாகவே வழங்கி வந்திருக்கின்றன. நாட்டார் வழக்கியல் வகையைச் சேர்ந்தது என்றுதான் தாலாட்டு வரையறுக்கப் படுகிறது.
குழந்தையைத் தூங்க வைக்க இசை மட்டுமே போதுமானது. ஆனால், தாலாட்டுப் பாடல்கள் மிகுந்த பொருட்ச்செறிவோடு பாடப்பட்டன. குழந்தைக்கு பண்பாடு, உறவுகள், கலாச்சாரம் போன்றவை எளிமையான தாலாட்டு இலக்கியம் மூலமாகவே அறிமுகமாகின்றன. மனிதனுக்கு வேண்டிய சீரிய பண்புகள் தாலாட்டின் வாயிலாக குழந்தைக்கு கற்பிக்கப் படுகின்றன. ஒரு தாய் தன்னுடைய குழந்தை எவ்வாறெல்லாம் வாழவேண்டும் என்ற உணர்வை தாலாட்டு மூலமாகவே குழந்தைக்குக் கடத்துகிறாள். குழந்தைப் பருவத்தில் கேட்கப்படும் தாலாட்டின் வழியாக சொல்லப்படும் கருத்துகள் மூளையின் ஒரு பகுதியில் சேகரிக்கப் படுவதாகவும், அதுவே பின்னாட்களில் குழந்தைகளை நல்வழிப் படுத்த பெரிதும் உதவுகின்றன என்றும் மன இயல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பல தலைமுறைகளாக வாய்வழியாகவே தாலாட்டுப் பாடல்கள் எளிய மக்களுக்கு அறியப்படுவதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு ஊர்களிலும் அந்த ஊரின் வரலாற்றுக்கேற்ப தாலாட்டுப் பாடல்களின் கருத்துகள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருள்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. ஒரு கருத்தை எளிமையாகப் பிறருக்கு உணர்த்த உவமை அல்லது உருவக அணி பயன்படுத்தப் படும். தாலாட்டுப் பாடல்களில் உவமை, உருவக அணிகளே பெரிதும் கையாளப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் தாலாட்டிற்கான முன்முதல் பதிவு அகநானூற்றில் கொற்றங்கொற்றனாரின் தாலாட்டுப் பாடல் (54வது பாடல்) மூலம் பதிவாகி இருக்கின்றது. தாயோ அல்லது செவிலித்தாயோ நிலவினைக் காட்டிச் சோறு ஊட்டுவது போன்ற பாடல் அது.
எழுதா இலக்கியமாக உலா வந்த தாலாட்டுப் பாடல்களை முதன்முதலில் முதன்மைக் கருத்தியல் வழக்காகப் பதிவு செய்தவர்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களுமே ஆவர். கடவுளைக் குழந்தையாகப் பாவித்து, தங்களைத் தாய் நிலையில் வைத்து தாலாட்டு வடிவத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். ஆழ்வார்களின் பாசுரங்களிலும் நாயன்மார்களின் திருமுறைகளிலும் பற்பல தாலாட்டுப் பாடல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
சிற்றிலக்கிய வகையான பிள்ளைத் தமிழ் மூலமாக தாலாட்டு இலக்கியம் தன் நெடிய பயணத்தை இனிதே தொடங்கியது. "தாலப் பருவம்" வாயிலாக ஒவ்வொரு பிள்ளைத் தமிழ் இலக்கியத்திலும் ஒரு தாலாட்டுப் பாடல் நிச்சயமாக இடம்பெறலாயிற்று.
தற்காலத்திலும் புதுக்கவிதைகள் வடிவத்தில் நிறைய தாலாட்டுப் பாடல்கள் இயற்றப்படுகின்றன.
நம் மண்ணின் மாண்பு, பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை நெறி போன்றவற்றை எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடியாக தாலாட்டுப் பாடல்கள்தான் திகழ்கின்றன. அவைகளை ஒருங்கிணைத்து பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.