27 April 2022 பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த பதிவுகளில், “ஹரியானா மாநில அரசின் செலவில் கரோனா தொற்றைத் தடுப்பதற்காக 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை டெல்லி அரசு ஏற்கெனவே வெளியிட்டது.இதேபோன்று தமிழகத்திலும் கரோனா பரவலைத் தடுக்க 60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது.மேலும், அடுத்த சில மாதங்களில் நான்காவது அலை தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படுகிறது; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு கட்டணம் செலுத்துவது சாத்தியமற்றது. எனவே அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்.” இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.