தமிழர் போரியல்

போர் என்பது தமிழர் மரபில் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே இருந்து வந்திருக்கிறது. போரினால் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி, போர்களைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளையும், கட்டாயமாகப் போர்செய்ய வேண்டிய சூழல்களில், பொது மக்களுக்குத் துன்பம் ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாக்கும் நெறிகளையும் புறநானூறு பதிவாக்கியுள்ளது. மோசமான விளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் பண்டைக் காலத்தில் சில வரையறைகளோடுப் போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. போர் தொடங்குவதற்கு முன்னர்ப் போரைப் பற்றி அறிவித்து, கொல்லக்கூடாத உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடப்பட்டது. இது போரின் அறத்தாறு […]

போர் என்பது தமிழர் மரபில் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே இருந்து வந்திருக்கிறது. போரினால் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி, போர்களைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளையும், கட்டாயமாகப் போர்செய்ய வேண்டிய சூழல்களில், பொது மக்களுக்குத் துன்பம் ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாக்கும் நெறிகளையும் புறநானூறு பதிவாக்கியுள்ளது.

மோசமான விளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் பண்டைக் காலத்தில் சில வரையறைகளோடுப் போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. போர் தொடங்குவதற்கு முன்னர்ப் போரைப் பற்றி அறிவித்து, கொல்லக்கூடாத உயிரினங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடப்பட்டது. இது போரின் அறத்தாறு எனக் குறிப்பிடப்படுகிறது.

“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும் பிணியுடையீரும், பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்,
எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை”

என்று பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய புறநானூற்றுப் பாட்டினால் அக்காலப் போர்களில் எவ்வாறு ‘அறப்போர்’ என்றக் கருத்து செயல் வடிவம் பெற்றது, எவரையெல்லாம் கொல்லக்கூடாது என்றுக் கருதினார்கள் எனத் தெளிவாக விளக்குகிறது. போரைத் தொடங்குமுன் பகைநாட்டு அரசனுக்குத் தூது அனுப்பும் வழக்கம் இருந்தது என்பதை அதியமான் சார்பாக ஒளவையார் தூது சென்றதிலிருந்து அறியலாம். மேலும், தூதுவர்களுக்கு இருக்கவேண்டிய சிறப்பான குணங்கள் பற்றித் திருக்குறளிலும் பேசப்பட்டுள்ளது.

“உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்று மிழிந்தன்று மிலனெ யவரை
அழுந்தப் பற்றி யகல் விசும்பார்ப்பெழக்
கவிழ்ந்து நிலஞ்சேர வட்டதை”

என்ற வரிகள் தன் எதிரில் வந்து நின்ற பகைவர்களை இறுகப் பிடித்து ஆகாயத்தில் ஒலியெழ உடல் நிலத்தில் விழவீழ்த்தியதை எடுத்தியம்புகிறது. எனவே அக்காலத்தில் நேருக்கு நேர் எதிர்த்து நின்றுப் போரிட்டனர் என்பதை அரியலாம். புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆயுதம் இன்றி நிர்கதியாய் நின்றோரையும் தாக்குதல்கூடாது என்பது அக்காலப் போர் மரபு. இதே ஒழுக்கத்தை இன்று வரையில் தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் காணலாம்.

மேலும், போரில்பட்ட காயங்களை விழுப்புண்கள் எனப் போற்றினர். நாட்டிற்காகப் போரிட்டு இறப்பது உயரிய பண்பு எனக் கருதப்பட்டது. போரில் இறந்துபட்ட வீரர்களின் பெயரால் அவர்தம் உறவினர்களுக்கு ஊர்கள் பரிசளிக்கப்பட்டன. போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நடுவது வழக்கம். அக்கல்லில் அவ்வீரனைப் பற்றிய குறிப்புகள் பொறிக்கப்பட்டன. இவ்வாறான கற்கள் மூலமாகவே பழந்தமிழரின் வாழ்க்கை முறையைப் பெரிதும் அறிய முடிகிறது. சங்க கால அரசர்கள், போரினால் பெற்ற புகழ் நிலைத்து நிற்குமாறு, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், கூடகாரத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்பது போலப் பெயர்களுடன் போர் விபரங்களை இணைத்துக் கொண்டனர்.

அரசனின் உயிர் மட்டுமல்ல, போர் செய்யும் ஒவ்வொரு வீரனின் உயிரும் மதிக்கப்பட்டதற்கு மற்றொரு சான்று, போரில் காயமடைந்த வீரர்களைப் பேண மனைகள் அமைக்கப்பட்டதே ஆகும். வேப்பந்தழைகள் செருகிய மனைகளில் வீரர்களுக்கு மருந்து அளிக்கப்பட்டதோடு மனச்சோர்வு நீக்க இசையும் இசைக்கப்பட்டது என்பது இலக்கியங்கள் மூலம் அறியப்படும் உண்மையாகும்.

போரில் தோற்றவரை இழிவாக நடத்தாமல், அவர்களைத் தம் நாட்டுக்கு அழைத்துவந்து பலவித வேலைகளுக்காகக் குடியமர்த்திய விவரங்களும் இலக்கியங்கள் மூலம் கிடைக்கப் பெறுகிறது. இதற்குச் சான்றாக, கரிகாலச் சோழன் இலங்கைமீது படையெடுத்துப் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டு வந்து காவிரிக்குக் கரைகட்டினான் என்ற விவரம் சங்க இலக்கியத்தில் இடம்பெறுகிறது.

சங்ககாலத்திலிருந்தே தமிழ் மக்கள் கப்பற்படை வைத்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. கடல் அரண் அமைத்து கடற்கொள்ளையில் ஈடுபட்ட கடம்பர்களை ஒழித்துக் ‘கடல்பிறக்கோட்டிய’ என்னும் சிறப்புப் பெற்றான் சேர அரசன் செங்குட்டுவன். ஆக, நிலம், நீர் என எவ்வகைப் போராக இருந்தாலும், தமிழர்களின் போர்முறை வஞ்சகம் மற்றும் சூழ்ச்சியற்ற அறப்போர்முறை ஆகும். மேலும் எதிரிகளுக்குச் சமமான வாய்ப்பை அளிப்பதாகவும் இருந்துள்ளது. தமிழரின் இந்தப் போர் பண்பாட்டின் வழியாகவே "இன்று போய் போர்க்கு நாளை வா" என்று இராமன் இராவணனை அனுப்பியதாகக் கம்பராமாயணம் கூறுகிறது.

இதன் மூலம், தமிழரின் உயர்ந்த 'போர் மரபு' விளங்குகிறது. இன்றைய நாளிலும் உலகில் போர்க் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், தமிழர்கள் முன்னர் இருந்தே ஒழுக்கமாகப் போர் புரிந்துள்ளது அவர்களின் உயரியப் பண்பாட்டின் அடையாளமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu