தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே போர் செய்யும் முறையில் சிறப்புக் கொண்டிருந்தனர். தொல்காப்பியத்தில் பண்டையப் போர் பற்றிப் பலக் கருத்துக்கள் காணப்படுகின்றன. நிலப்பகுதிக்கு ஏற்பவே போர்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை ‘புறத்திணையியல்’ வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், மனிதனின் நாகரிக வளர்ச்சியின் அடிப்படையில் போர்களுக்கானக் காரணமும் வளர்ந்து வந்திருக்கிறது.
உதாரணமாக, ஆதியில் வாழ்ந்த குறிஞ்சி மக்களுக்கு அவர்கள் பழக்கப் படுத்தியக் கால்நடைகளே முக்கியம். எனவே, குறிஞ்சியில் ஆநிரைகளை கவர்தல், அதனை மீட்டலுக்குமான போர்கள் நடைபெற்றுள்ளன. பின்னர், குழுவாக வாழத் தொடங்கிய வளர்ச்சி நிலையான முல்லையில், தம்மை மதியாத வேந்தனை எதிர்த்தும், காட்டு வளம் மீது கொண்ட ஆசையின் பொருளாலும் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. வேளாண்மை நாகரிகமும், ஊர்கள் கூடிய நாடு எனும் கலாச்சாரமும் வளர்ந்த மருத நிலப்பகுதியில் சொத்தாகக் கருதப்பட்ட எயிலை முற்றுகையிட்டு நாட்டைக் கைப்பற்றுதலும், எயிலைக் காத்துத் தம் நாட்டைப் பாதுகாத்தலுக்குமான போர்கள் நடத்தப்பட்ட வரலாற்றை அறிய முடிகிறது. ஒரு தேசமென உருவான பின்னர், நாட்டின் வலிமையைப் பறை சாற்றும் அம்சமாக வர்த்தகம் பார்க்கப்பட்டது. எனவே, உற்பத்தி பெருக்கம், கடல் வாணிபம் மற்றும் பண்டமாற்று ஆகியனவே யார் அப்பகுதியில் ஆள்வது என்பதை நிர்ணயித்தன. எனவே, நெய்தல் நிலத்தில் வலிமை குறித்தப் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. சேர, சோழ மற்றும் பாண்டியர் காலத்தில் இவ்வகைப் போர்கள் குறித்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவ்வாறு, நான்கு வகைப் போர்கள் நிகழ்ந்ததாகத் தொல்காப்பியத்தின் புறத்திணையியலில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சிகள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், மெய்கீர்த்திகள், நாணயங்கள், பயணக் குறிப்புகள், ஆவணங்கள் எனப் பலவற்றிலும் போர் முறைகளைப் பற்றியத் தகவல்களைக் காண முடிகிறது. மேலும், சங்க இலக்கியங்களில் எண்ணற்றப் பாடல்கள் போர் நிகழ்வுகளைக் குறித்து பாடப் பட்டுள்ளன.
தமிழரின் அடிப்படை முக்கருவிகளாக வில், வேல், அம்பு ஆகியன பண்டைக் காலம் தொட்டே அமைந்திருந்தன. அவற்றைத் தயாரிக்கவும், சரி செய்து கொள்ளவும் பல தயாரிப்பு நிலையங்களைத் தமிழர் வைத்திருந்தனர். திறனொழிந்த படைக்கருவிகளை அப்படியே விட்டுவிடாது மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தமிழர் கற்றிருந்தனர். முற்றிலும் பயனாகாதப் படைக்கருவிகளைப் படைவீடுகள் அமைக்கப் பயன்படுத்திக் கொண்டனர். இது போன்றப் பலச் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. "வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே" என்ற பொன்முடியார் பாடலின் வழியாகத் தமிழர்களின் வாழ்வோடு போர் முறை ஒன்றியிருந்ததை அறிய முடிகின்றது. இவ்வாறு, உலகிற்கே போர் முறைகளையும், போர் செய்யும் கருவிகளையும் தமிழர் கற்றுக் கொடுத்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
"வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும்
தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய"
என்றத் தொல்காப்பிய பாடல், கரிப்படை (யானைப்படை), பரிப்படை (குதிரைப்படை), தேர்ப்படை, காலாட்படை என்ற நான்கு வகை நிலப்படைகளை எடுத்துக் கூறுகிறது. வில், அம்பு, அம்பறாத்தூணி என்ற மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாகத் தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர். "கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்" என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒளவையார் பாடிய பாடல் ஒன்று, இந்த மூன்றுக் கருவிகளையும் ஒருங்காகக் காட்டுகிறது.
"மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல்
செறிப்பு இல் நின் வேல் கண்டவர்
தோல் கழியொடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடுப் பரந்த
நின் மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது"
என்றப் புறநானூற்றுப் பாடல் முக்கருவிகளும் ஓர் அரசனிடத்தில் இருந்தமையை விளக்குகிறது. இதன் மூலம், தமிழர்கள் போர் கலையின் உச்சத்தை அடைந்ததை அறிய முடிகிறது.
மேலும், வில், வாள், வேல் ஆகியன முதன்மைப் போர் கருவிகளாக இருந்துள்ளன. அவற்றோடு சேர்த்து இன்னும் பலவகைக் கருவிகள் இருந்துள்ளதை இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. அவற்றுள் சில: வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் ஆகியன. போர்க் கருவிகளே இத்தனை இருந்திருந்தால், போர்கள் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்பதை கற்பனைக் கூட செய்ய இயலாது.
கால வளர்ச்சியில், தமிழர்களின் போர் முறை வழக்கொழிந்து, இன்று வெறும் தற்காப்புக் கலைகளாத் திகழ்கின்றது. உலகின் மூத்த தற்காப்புக் கலையான "களரி" தமிழர்களின் பழங்காலப் போர் முறையின் வடிவமே ஆகும். களரியைக் கண்டு வியப்புராதவர்கள் இருக்கவே முடியாது. அவ்வாறெனில், தமிழர்களின் போர் முறையின் சிறப்புக்கான அளவுகோல் எங்கிலும் இல்லை.