தமிழர்களின் கடல் வணிகம்

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழில் ...

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. அந்தப் பழமொழி உருவாகியதற்கு, அக்காலத்தில் தமிழர்கள் கடல் வணிகத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்ததே காரணமாகும். தமிழர்களின் வணிக மேலாண்மைக்குப் பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. அவற்றோடு, தொல்லியல் சான்றுகளும், உலகில், தமிழர்களே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை உறுதி செய்கின்றன.

தமிழ் இலக்கியங்களில் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பட்டினப்பாலைப் போன்ற நூல்கள் கடல் வணிகத்தைப் பற்றியப் பலக் குறிப்புகளைத் தருகின்றன. தமிழகத்துடன் பல நாடுகளுக்குக் கடல் வணிகம் நடைபெற்றதை

"வேறு பன்னாடிற் காறர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருத்துன"

என்ற நற்றிணைப் பாடல் கூறுகிறது. வெவ்வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டப் பொருட்களும், தமிழகத்திலிருந்து ஏற்றுமதிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்களும் புகார் நகரில் மலை போலக் குவிந்திருந்ததை,

“செல்கதில் நுழையாச் செழுநகர் வரைப்பின்
செல்லா நல்லிசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டு
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்”

என்றப் பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், தமிழர்களின் உப்பு வணிகம் உலகின் ஆணிவேராக இருந்து வருவது சங்க காலப் பாடல்கள் தொடங்கி, சென்ற நூற்றாண்டின் உப்புச் சத்தியாகிரஹப் போராட்டம் வரையில் நிரூபிக்கப் பட்டுள்ளது. சங்க காலத்தில் இவ்வணிகத்தைச் செய்தவர்கள் 'உமணர்கள்' என அழைக்கப்பட்டனர்.

“உப்பெய் சாகாட்டு உமணர் காட்ட
கழி முரி குன்றத்து அற்றே”

என்றப் புறநானூற்றுப் பாடல் உப்பு வணிகத்தின் தொன்மையைக் கூறுகிறது.

“பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய்
ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று
தொக்காங்கு
மொழி பல பெருகிய பழிதீர்
தேயத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிது
உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்”

என்னும் பாடல், வணிகத்தில் ஈடுபட்ட பல மொழிகள் பேசும் அயல்நாட்டினர் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றாகிறது. அவ்வாறு, பிறநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் வாழ்ந்தவர்களை யவனர்கள் என்றும் மிலேச்சர் என்றும் குறிப்பிடுவதை ‘முல்லைப்பாட்டு’ என்ற இலக்கியம் எடுத்துக்காட்டுகின்றது. யவனர்கள் பொன்னைக் கொடுத்துப் பண்டமாற்றாக 'கறி' என்றழைக்கப்பட்ட மிளகை எடுத்துச் சென்றனர் என்ற செய்தி

"யவனர் தந்த வினைமா ணன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்"

என்ற அகநானூற்றுப் பாடல் மூலம் தெரிய வருகின்றது. மேலும், இன்றையச் சுங்க வரி, பழங்காலம் முதலே இருந்து வந்திருக்கிறது என்பதைப் ‘பட்டினப்பாலை’ என்ற நூல் சான்றுகளோடு விளக்குகிறது. இலக்கியத்தில் 'வரி' என்பது 'உல்கு' என்ற சொல்லால் அறியப்பட்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி செலுத்தும் நடைமுறை இருந்தது என்றால், அதற்கும் முந்தைய நூற்றாண்டுகளிலேயே தமிழகத்தில் வணிக முறை தோன்றி, செழித்திருக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

சங்க இலக்கியங்கள் மட்டுமின்றி, மார்க்கோ போலோ, தாலமி, பிளினி, பெரிப்ளஸ் போன்ற வெளிநாட்டினர் எழுதிய நூல்கள் மற்றும் பயணக் குறிப்புகள் ஆகியனத் தமிழர்களின் வணிகத் திறனுக்குச் சான்றாக அமைகின்றன. அன்றைய உலகில் தமிழர்களே மிகப்பெரிய கடலோடிகளாகவும், அதிக அளவிலான கடலாதிக்கமும், வணிக மேலாண்மையும் கொண்டவர்களாக இருந்தனர் என்பதற்கு “எரித்ரேயக் கடலில் பெரிப்ளஸ்” என்ற கிரேக்க நூலை அதிகாரப்பூர்வ ஆவணமாகக் கூறலாம். அந்த நூலில், தொண்டி, குமரி, முசிறி, கொற்கை, புகார் ஆகியத் துறைமுக நகரங்கள் பற்றியச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அன்றைய மேற்கத்திய நாடுகளான, உரோம், எகிப்து, கிரேக்கம், அரேபியா ஆகிய நாடுகளில் இருந்தக் கப்பல்களைவிடப் பெரியக் கப்பல்களைத் தமிழகம் பயன்படுத்தியது என்றும் அப்பெருங்கப்பல்கள் எண்ணிக்கையிலும் மேற்கத்திய நாடுகளைவிட அதிக அளவில் தமிழகத்தில் இருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு, சங்க இலக்கியங்கள் மற்றும் வெளிநாட்டவர் குறிப்புகளின் படி, கி.மு.3000 நூற்றாண்டிலேயே, தமிழர்கள், சுமேரியா, இஸ்ரேல், அரபுநாடு, கிரேக்கம் மற்றும் எகிப்துவோடு கடல் வாணிகம் செய்து அகில், சந்தனம், யானைத்தந்தம், மயிற்தோகை, முத்துக்கள், ஆடைகள், மிளகு, ஏலம் முதலிய வாசனைப்பொருட்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்ததும், பிறநாட்டிலிருந்து குதிரைகள், பொற்காசுகள் போன்றவற்றை இறக்குமதி செய்ததும் அறிய முடிகின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் தொல்லியல் சான்றுகளும் கிடைத்துள்ளன.

தமிழகத்திற்கும் அரபு நாட்டிற்கும் உள்ள வணிகத் தொடர்பைக் கூறும் விதமாகச் சிற்பச் சான்றுகள் உள்ளன. நாங்குனேரி வானமாமலைக் கோயில் பிரகாரத்தின் சுவர்களில், ஆங்கர் வடிவ மீசையும், ஒழுங்குபடுத்தப்பட்ட தாடியும் கொண்ட, முழுக்கைச் சட்டை, நீண்ட டர்பன் மற்றும் முழுநீள ஆடை அணிந்த அராபிய வணிகர்களின் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இதே போல, விஜயநகர காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடல் வணிகத்தை மிக அழகாக விளக்கும் சிற்பக்காட்சி திருக்குறுங்குடி முதல் கோபுரத்தின் உட்புறச்சுவரில் காணப்படுகிறது. ஒரு சிற்பத்தில், நீண்ட துடுப்புகள் கொண்டு இயக்கும் வகையிலானக் கப்பல், ஒரு சிறிய படகு, கப்பலில் இருந்து கரையில் இறக்கிய நிலையில் உள்ளக் குதிரைகள் ஆகியவைத் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு காட்சியில் அரசன் ஒருவன் அரண்மனைக்குள் உயர்ந்த ஆசனத்தின் மீது அமர்ந்துள்ளது போலவும் எதிரில் வணிகர்கள் தங்கள் குதிரைக்கான விலையைப் பேசுவது போலவும் அமைந்துள்ளது.

தமிழர்கள் உலகமெங்கும் வணிகம் செய்ததற்குத் தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன. உதாரணமாக, சீனம், எகிப்து, இலங்கை, ஜப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள், தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், ஜப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒத்துப்போவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், எகிப்தியர்களோடு தமிழர்கள் வணிகம் செய்ததற்குச் சான்றாக எகிப்தின் செங்கடல் துறைமுகங்களான குசிர் அல் குவாதிம், பெரனிகே ஆகிய இடங்களில் கி.மு.1ஆம், கி.பி.1ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ள ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றோடு, கிரேக்கர்களோடு வணிகம் செய்ததற்கு அடையாளமாகப் பல கிரேக்க நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

கி.மு.1000 நூற்றாண்டைச் சேர்ந்த பெர்சியன் வகை 'கல் நங்கூரம்' தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தாரால் தமிழகத்தின் குருசேடைத் தீவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரேல் உடனான தமிழகத்தின் வணிகத்திற்குச் சான்றாகும். கி.மு.500 ஆண்டுகளில் ஐரோப்பாவுடனான வணிகத்தில் கிரேக்கர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டனர் எனவும் இப்பரிமாற்றத்தால் வணிகப் பண்டங்களின் தமிழ் பெயர்கள் கிரேக்க மொழியில் இடம் பெற்றுள்ளன எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அரிசி, ஒரைஸ் ஆகவும் கருவா, கார்பியென் ஆகவும் இஞ்சி, ஜிஞ்சிபெரோஸ் ஆகவும் கிரேக்க மொழியில் வழங்கப் படுவது இதற்குச் சான்றாகும்.

வணிகப் பொருளாதாரமே ஒரு நாட்டின் வலிமையாகும். எனவே, தமிழர்கள் உலகின் வலிமை மிகுந்தவர்களாக இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் அறியப்படும் பெருமைமிகு உண்மையாகும்.

4
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu