“நீரின்றி அமையாது உலகு” என்பது பழந்தமிழர் உணர்ந்த பேருண்மையாகும். பழந்தமிழர்கள் மிகச்சிறப்பான முறையில் நீர் மேலாண்மையினை மேற்கொண்டிருந்தனர். ஒரு ஆறு; அதில் இருந்து ஒரு ஏரி; அவ்வாறே ஆறு முடியும் வரையில் சங்கிலித் தொடராக பல ஏரிகளை உருவாக்கினர். மேலும் கோயில்களோடு சேர்த்து குளங்களையும் அமைத்தனர். தமிழர்களின் நீர் மேலாண்மையை எடுத்துக்காட்டும் விதமாகத் திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமானே வைகையின் கரையைப் புனரமைக்கும் பணியைச் செய்ததாகப் பாடல்கள் வருகின்றன.
இன்று நாம் காணும் எண்ணற்ற கண்மாய்களும், ஏரிகளும் தமக்குள் ஒப்பற்ற செய்திகளைப் புதைத்துக் கொண்டுள்ள வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். இந்த ஏரிகள் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள், தண்ணீரைப் பகிர்வதிலும், சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மைக் கோட்பாடுகள் ஆகியன வியக்கத்தக்கதாக உள்ளன.
ஏரிகள் குறித்த எண்ணற்ற சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. "சிறுபஞ்சமூலம்" நூலில் ‘காரியாசான்’ எப்படி ஏரிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை
“குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்து உழம்தொட்டு
உழுவயல் ஆக்கி வளம்தொட்டு பாகுபடும் கிணற்றோடு
என்று இவை பார்படுத்தால் சொர்க்கம் இனிது”
என்ற பாடல் வரிகள் மூலம் விளக்குகிறார். குளங்கள், கிணறுகள் போன்ற நீர் நிலைகளை உருவாக்கும் செயல்களை செய்பவர்கள் சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்கிறது அந்தப் பாடல். மேலும்
“வையை உடைந்த மடையடைத்தக் கண்ணும்
பின்னு மலிரும் பிசிர் போல வின்னும்”“ஆறு குளம் நிறைக்குற போல அல்குலும்”
“ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க”
என்னும் பாடல் அடிகள் சங்க கால மக்கள் மடை, கால்வாய், குளம், கேணி உள்ளிட்டவை மூலம் நீரினைச் சேமித்து வந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
ஊர் கூடி நீர் நிலைகளைப் புனரமைக்கும் பணிகள் செய்ததை
“வரைச்சிறை உடைந்ததை வையை வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை அறைக எனும்
உரைச்சிறைப் பறைஎழ, ஊர் ஒலித்தன்று”
என்ற பரிபாடல் வரிகள் ஆவணப்படுத்துகின்றன.
மேலும் “வரப்புயர நீருயரும் நீர் உயர்ந்தால் நெல் உயரும் நெல் உணர்ந்தால் குடி உயரும் குடி உயர்ந்தால் கோன் உயர்வான்” என்று ஒளவையார் கூறியுள்ளார். எனவே அரசர்களும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனின் (கி.பி.815-860) கல்வெட்டு ஒன்று ஸ்ரீகண்ட வாய்க்காலில் வரும் நீரை ஒழுங்குபடுத்தி, எந்தெந்த நிலங்களுக்கு, எவ்வளவு நேரம் நீர் பாய்ச்ச வேண்டும், இந்த நீர் பாய்ச்சலில் யார் யாருக்கு எந்த வரிசைக் கிரமத்தில் பாய்ச்ச வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குமுறை தவறியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல, புதுக்கோட்டை மாவட்டம் நாஞ்சூர் ஏரியில் தண்ணீர் பங்கீடு செய்வதற்கு "முறைப்பானை" என்ற வழக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்ததாக, அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இந்த முறை பல்லாயிரம் வருடங்களாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பது அவர்கள் கூறும் செய்தியாகும். அதன் படி, ஒரு பானையின் அடிப் பாகத்தில் சிறு துளையிடப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு துளை, ஐந்து ஏக்கருக்கு ஒரு துளை, 10 ஏக்கருக்கு ஒரு துளை என இந்தத் துளைகள் பல்வேறு அளவுகளில் இருந்தன. மதகைத் திறக்கும் அதே நொடியில், நீர் நிரப்பிய பானையின் துளையை திறந்துவிடுவார்கள். பானையின் நீர் முழுவதும் காலியானால் குறிப்பிட்ட அளவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்ததாக கணக்கிட்டனர். இது சுழற்சி முறை பாசனம் என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் திறந்துவிடும்போது நாழிகையைக் கணக்கிட ஆட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இதில் தவறு செய்தால் தண்டனையும் வழங்கப்பட்டது.
இதனைப் பின்பற்றித்தான் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் 'வாரபந்தி' என்கிற சுழற்சி பாசனமும், 18-ம் நூற்றாண்டில் பாலாற்று ஏரிகளில் 'மாமூல் நாமா' என்கிற சுழற்சி முறை பாசனமும் உருவாக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தமிழர் வாழ்வில் நீர் மேலாண்மை எவ்வாறு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்றாகும்.
பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், இன்று நீர் மேலாண்மையில் நாம் பின்னிலையடைந்தே இருக்கிறோம் என்பதே உண்மை. வரும் தலைமுறையின் எதிர்காலம் கருதி நீர்நிலைகளைக் காக்க உறுதிமொழி ஏற்போம்.