பொம்மைகள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாக மட்டுமின்றி, ஒரு நாட்டின் பண்பாடு அல்லது கலையின் பிரதி பிம்பமாகவும் விளங்குகின்றன. பொம்மைகளைக் கொண்டு சமயம், காலம், சமூகம், பழக்க வழக்கம் போன்றவைகளைக் கணிக்க இயலும். உதாரணத்திற்கு, சிந்துவெளி நாகரிகத்தில் (கி.மு 3010 - 1500) வண்டி, ஊதல், நூலினால் இயக்கப்படும் சாயும்-குரங்கு போன்ற பொம்மைகளின் படிமங்கள் கிடைக்கப் பெற்றன. அவற்றைக் கொண்டே அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறையை அறிஞர்கள் அறிந்து கொண்டனர். மேலும் சங்க இலக்கியங்களில், குழந்தைகள், பந்துகள் கொண்டும், சிறுத்தேர் உருட்டியும் விளையாடியதாகப் பாடல்கள் கூறுகின்றன. அவை வண்டி, பந்து போன்ற பொம்மைகளைப் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்குச் சான்றாகும். அந்த வரிசையில் தமிழ்க் கலாச்சாரத்தின் வடிவமாகப் பார்க்கப்படுவன "மரப்பாச்சி பொம்மைகள்" ஆகும்.
மரப்பாச்சி பொம்மைகள் வீட்டின் வளத்துக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அடையாளமாகத் தென்னிந்தியக் குடும்பங்களில் பராமரிக்கப்படுகின்றன. ஊசியிலை, முள்ளிலவு, தேக்கு, செம்மரம், செஞ்சந்தனம் போன்ற மரங்களில் இருந்து மரப்பாச்சிகள் செய்யப்படுகின்றன. மரப்பாச்சி பொம்மைகளில் ஆரோக்கியத்தின் தத்துவம் அற்புதமாய் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. செஞ்சந்தன மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவத் தன்மையுடன் விளங்குவதாகத் தமிழர்கள் கருதுகின்றனர். எனவே, திருமணமான தம்பதிகள் தங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு மரப்பாச்சி பொம்மைகளைப் பரிசாக அளிக்கும் மரபுக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் அவற்றை வாயில் வைத்து சப்பும்போது அதன் மருத்துவ குணங்கள் உடலுக்கு நன்மைத் தருவதாக நம்பப்படுகிறது. மேலும் தாய் வீட்டுச் சீதனமாகவே இந்த பொம்மைகள் இன்றளவிலும் அளிக்கப்படுகின்றன. தென்னிந்தியாவில், புனிதத்தின் சின்னமாகக் கருதப்படும் இந்தப் பொம்மைகளைத் தெய்வமாக அலங்காரம் செய்து, நவராத்திரி பண்டிகைகளின் பொழுது கொலுப் படிகளில் வைத்து வணங்குவார்கள்.
மரப்பாச்சி பொம்மைகள் குழந்தைகளின் விடாமுயற்சி, ஆர்வம், ஊக்கம், வெற்றி, பெருமிதம், தன்னிறைவு உள்ளிட்ட பண்புகளைச் செப்பனிடுவதாகவும் உள்ளன. ஒரு குழந்தை இந்த பொம்மையை உயிருள்ள மனிதனைப் போலவே நினைக்கும். குழந்தைகளின் உலகத்தில் ஒரு மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, மாறிப்போகும்; உயிருள்ள மனிதன் செய்யும் அனைத்து செயல்களையும் செய்யும். அதற்கு அந்த பொம்மையின் வடிவமைப்பே காரணமாகும். மனிதனின் உருவத்தை அப்படியே செதுக்கியது போல் வடிவமைக்கப் பட்டிருக்கும். ஆண் மற்றும் பெண் உருவ அமைப்புகள் கொண்டிருக்கும் அவற்றின் மூலம் குழந்தைகள் பாலின வேறுபாட்டையும் கற்றுக் கொள்கிறார்கள்.
தமிழர்கள் தங்கள் கலாச்சார அடையாளமான இந்த பொம்மைகளைக் கடல் கடந்தும் எடுத்துச் சென்றனர். எனவே, மரப்பாச்சி பொம்மைகளைப் போன்ற உருவ அமைப்புக் கொண்ட பொம்மைகள் ஆப்பிரிக்க நாட்டிலும், ஜப்பான் நாட்டிலும் காணப்படுகின்றன.
தமிழர்கள் எப்படி மரப்பாச்சி பொம்மைகளைச் சீதனமாகக் கொடுக்கும் பழக்கம் கொண்டார்களோ, அதே போல ஆப்பிரிக்காவில் உள்ள அசாந்தி எனும் பழங்குடிகள் அகுவாபா எனும் மரத்தாலான பெரும் தலைகளுடைய பொம்மைகளைத் தாய்வழி மகளுக்குச் சீதனமாகவும் சடங்குப் பொருளாகவும் கொடுக்கின்றனர்.
ஜப்பான் நாட்டில், ஹினமட்சுரி விழாவின் போது ஜப்பானிய மரபு பொம்மைகள் வரிசைக்கிரமமாகப் படிகளில் அடுக்கி வைக்கப் படுகின்றன. இப்பொம்மைகளை வைக்கோல் அல்லது மரத்தால் தயார் செய்து, வண்ணமிட்டு, பரந்த ஆடைகளை பல்லடுக்குகளில் அணிவித்துக் காட்சிக்கு வைக்கின்றனர். அந்த பொம்மைகள் மரப்பாச்சி பொம்மைகளின் வடிவத்தையே ஒத்திருக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் இந்த விழா தென்னிந்தியாவிலுள்ள கொலுவைப் போன்றதாகும் என்று விளக்குகின்றனர்.
மரப்பாச்சி பொம்மைகள் எனும் தமிழ்க் கலாச்சார எச்சம் பிற நாட்டில் உள்ளதை இந்தச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, மரப்பாச்சி பொம்மைகள் நம் அடையாளம் என்பதை உணர்ந்து, நவீனத்தின் மோகத்தால் மறக்கப்பட்டு விட்ட இந்த பொம்மைகளை மீட்டெடுப்போம்.