தமிழின் பொழிவிற்கு அழகுசேர்த்த பெரும் புலவர் சுவாமி வேதாச்சலம் என்கிற மறைமலை அடிகள் - ஒரு தமிழ் இலக்கிய நாயகனின் கதை

தமிழின் இனிமை, செழுமை, அருமை இம்மூன்றும் அதை முழுமையாக அனுபவித்து அறிந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அதற்கு சான்றாக தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான வருடங்களாக லட்சணக்கணக்கான இலக்கண இலக்கிய நூல்கள் வெளியாகியுள்ளது. அதை அத்தனையும் படிக்க இயலாவிட்டாலும் தமிழின் உண்மை சுவையை அறிய விரும்பும் ஒருவர் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழிக்கு உதாரணமாக நம் மண்ணில் வாழ்ந்து மறைந்த மறைமலை அடிகள் எழுதிய மொத்த நூல்களையும் படித்தாலே போதும் உணர்ந்து விடலாம். […]

தமிழின் இனிமை, செழுமை, அருமை இம்மூன்றும் அதை முழுமையாக அனுபவித்து அறிந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அதற்கு சான்றாக தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான வருடங்களாக லட்சணக்கணக்கான இலக்கண இலக்கிய நூல்கள் வெளியாகியுள்ளது. அதை அத்தனையும் படிக்க இயலாவிட்டாலும் தமிழின் உண்மை சுவையை அறிய விரும்பும் ஒருவர் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழிக்கு உதாரணமாக நம் மண்ணில் வாழ்ந்து மறைந்த மறைமலை அடிகள் எழுதிய மொத்த நூல்களையும் படித்தாலே போதும் உணர்ந்து விடலாம்.

வேற்று மொழி கலந்து துன்புற்றிருந்த தமிழ்மொழியை மீண்டும் கலப்பில்லாமல் பேச தொடங்க இவர் ஆற்றியப் பணிகள் அனைத்துமே மகத்தானது. தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த பெரும் புலவர் மறைமலை அடிகளின் சொந்த ஊர் நாகை மாவட்டம் காடம்பாடி அந்த சிற்றூரில் 1876-ம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் சொக்கநாத பிள்ளை - சின்னம்மாள் தம்பதியருக்கு தவப் புதல்வனாக பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்டப்பெயர் வேதாசலம்.

அவர் பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள். பின் நாட்களில் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரையே தூய தமிழில் மாற்றினார். வேதாச்சலம் என்ற பெயரை வேதம், அசலம் என்று இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். வேதம் என்ற வடமொழி சொல்லுக்கான தூய தமிழ்ச்சொல் மறை. அசலம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் மலை. சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள். எனவே சுவாமி வேதாசலம் என்ற பெயர் 'மறைமலை அடிகள்' என்று மாறிக்கொண்டார்.

மறைமலை அடிகள் தனது சிறுவயது முதல் தன்னோடு பழகிய செளந்திர வள்ளியம்மையை, தன் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தனர். தன் 22வது வயதில் சூலைநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதியுற்றார். அந்த நேரத்தில், திருவொற்றியூர் முருகன் மீது பக்திகொண்டு, ‘மும்மணிக் கோவை’ நூலை இயற்றினார். அதன் பயனாக, முருகப் பெருமானே அவர் நோயைக் குணமாக்கினார் என்று அவர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் தம் வாழ்நாளில் மொத்தம் 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார் மறைமலை அடிகள்.

தனித்தமிழ் இயக்க துவக்கம்! அன்றைய நாளில் ‘ஆங்கிலமும், சமஸ்கிருதமும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மறைமலை அடிகளார், பல்கலைகழக முடிவை எதிர்த்துத் தன்னுடைய ஆசிரியப்பணியில் இருந்து விலகினார்.

தன் குடும்ப சூழல் காரணமாக ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே மறைமலை அடிகள் கல்வி கற்றிருந்தாலும் தன் கடும் உழைப்பால் ஆர்வத்தால் தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருதம் என மும்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். தன் தமிழ் புலமையால் பல்கலைகழக தமிழாசிரியர் பணியை அடையும் துணிவும் பின் அதே துணிவால் தான் தனக்கு கிடைத்த ஆசிரியப் பணியையும் மொழி கொள்கைக்காக விலகும் முடிவையும் எடுத்தார். வெறும் வாய்ப்பேச்சால் மட்டும் மக்களிடையே எந்த கொள்கைகளையும் கொண்டு சேர்த்து விட முடியாது என்ற தெளிவும் அவரிடம் முழுமையாக இருந்ததால்தான் அவர் 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழ் மொழியில் பல நல் மாற்றங்களை கொண்டு வந்து தன்னுடையக் எல்லா கொள்கைகளையும் தானே வாழ்ந்தும் காட்டினார்.

மறைமலை அடிகளார் அவர்களின் தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய மறைமலை அடிகளார், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். 1937-ல், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டபோது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கி போராடினார் தன் மகன் மறை திருநாவுக்கரசை அந்த போராட்டத்தில் ஈடுபட வைத்து சிறை செல்லவும் வைத்தார்.

இப்படி தன் சொல் செயல் என்று அத்தனையின் மூலமும் நம் தமிழ் மொழிக்கு அரும்பணி ஆற்றிய மறைமலை அடிகள் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

‘‘நம் அன்னைத் தமிழில் வேற்று மொழிக் கலப்பை ஒதுக்கித் தள்ளுங்கள். தமிழின் அருஞ்சுவையை ஒருபோதும் மாற்றாதீர்கள்... வல்லோசைகளைப் தமிழில் பெருக்காதீர்கள்’’ என்று சூளுரைத்தார். மேலும்,

"தன் தனித்தமிழ் இயக்கம் மூலம் அதுவரை தமிழில் எழுதப்பட்ட மணிப்பிரவாள எழுத்து நடைக்கு மாற்றாக தூய தமிழ் எழுத்து நடையை முன் வைத்தார். அதை அனைவரையும் பின்பற்றும்படி செய்தார்".

அவரின் கூற்றுப்படி தமிழை வளர்ப்போம். தமிழ் மொழியை எல்லாத்துறைகளுக்கும் எடுத்து செல்வதுதான் நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன் ஆகும்.அவரிடம் இருந்த துணிவும், வைராக்கியமும், சிந்தனைத் தெளிவும், கொள்கைகளை வாழ்ந்து காட்டும் மனோதிடமும் நமக்கும் இருந்தால் நம்மாலும் நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu