போகி பண்டிகையையொட்டி சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் ரப்பர் ட்யூப் மற்றும் நெகிழி ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திட வேண்டும் எனவும் அதனை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிடவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது. பொதுமக்களிடமிருந்து சுமார் 100 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
போகி பண்டிகையை ஒட்டி பழைய பொருட்கள் எரிக்கப்படுவதால் சென்னையில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 6 மணிநேரம் நிலவரப்படி காற்று மாசு அளவு ஆலந்தூரில் 155, பெருங்குடி 113 , கொடுங்கையூர் 94, மணலி 87 , அரும்பாக்கம் 86 , வேளச்சேரி 84 , ராயபுரம் 82 என அதிகரித்துள்ளது.