கடந்த பிப்ரவரியில் நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி 12 ஆண்டுகளில் இல்லாத உயர்வைக் கண்டுள்ளது.
'எஸ் அண்டு பி., குளோபல்' நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த பிப்ரவரியில் சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும் 'எஸ் அண்டு பி., குளோபல் எஸ்.பி.எம்.ஐ.,' குறியீடு 59.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது ஜனவரியில் 57.2 புள்ளிகளாக இருந்தது. இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சேவைகள் துறை வளர்ச்சியை காண்பித்துள்ளது.
மேலும், தொடர்ந்து 19 மாதங்களாக சேவைகள் துறை வளர்ச்சியானது தொடர்ந்து 50 புள்ளிகளுக்கு மேல் இருந்து வருகிறது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சி என்றும்; அதற்கு கீழே இருந்தால் சரிவு என்றும் கருதப்படும். உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த கலப்பு பி.எம்.ஐ., குறியீடு ஜனவரியில் 57.5 புள்ளிகளாக இருந்தது. பிப்ரவரியில் 59 புள்ளிகளாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.