இந்தியா–மியான்மர்–தாய்லாந்தை இணைக்கும் நெடுஞ்சாலை, 4 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை (சிஐஐ) வணிக மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது. இந்தியா–மியான்மர்–தாய்லாந்தை இணைக்கும் முத்தரப்பு தேசிய நெடுஞ்சாலை குறித்து இந்நிகழ்வில் பேசப்பட்டது. அப்போது இந்தத் திட்டம் குறித்து தாய்லாந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கூறுகையில், மொத்தம் இந்த சாலையின் தூரம் 2,800 கிமீ ஆகும். இதில் 2,500 கிமீ இந்தியா மற்றும் மியான்மரில் அமைகிறது. தாய்லாந்தில் சாலைஅமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. இந்தத் திட்டம் முழுமை பெற இந்தியா மற்றும் மியான்மரில் மீதமுள்ள தூரத்துக்கு சாலை அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்தக் கட்டமைப்பு இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.