நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர் எண்ணிக்கை 2.49 லட்சமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.49 லட்சமாக உள்ளது. தவிர 1.80 லட்சம் வாக்காளர்கள் 80 வயதைக் கடந்தவர்கள் ஆவர்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் புனேவில் 49.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. மேலும், 18 வயது நிரம்பிய இளைய தலைமுறையினர் ஆர்வமுடன், உற்சாகத்துடன் வாக்களிக்க முன்வர வேண்டும். உங்கள் வாக்குகளால் மட்டுமே பாரம்பரிய ஜனநாயகம் வலிமை பெறும் என்று அவர் கூறினார்.