நாக்பூரில் இன்று இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில், நாக்பூரில் இன்று 108-வது இந்திய அறிவியல் மாநாடு தொடங்கவுள்ளது. இந்த மாநாடு ஜனவரி 7 -ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற உள்ளது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
நிலையான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், இவற்றை அடைவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். மாநாட்டில் நாடு முழுவதிலும் உள்ள அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், இன்ஸ்டிடியூட்டுகளில் இருந்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.