டிசம்பர் மாதம் நிறைவு பெறும் தருவாயில், டிசம்பர் 30 அன்று மாலை 5:27 மணிக்கு 'கருப்பு நிலவு' - பிளாக் மூன் என்ற அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ்வது மிகவும் அரிதானது. எனவே, வானியல் ஆர்வலர்கள் இன்றைய நிகழ்வை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கருப்பு நிலவு காலத்தில் சந்திரன் நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும். இதனால், நட்சத்திரங்களை தெளிவாகக் காண ஏற்ற சூழல் உருவாகும். அதேசமயம், டிசம்பர் 30 அன்று இரவில் வானில் வெள்ளி மற்றும் சனி கிரகங்கள் தென்மேற்கில் பிரகாசிப்பதை காணலாம். மேலும், கிழக்கு வானில் வியாழன் கிரகம் அல்டெபரான் நட்சத்திரத்திற்கு அருகில் தெரியும். சூரியன் மறைந்த பிறகு செவ்வாய் கிரகமும் தோன்றும். வடக்கு அரைக்கோளில் வசிப்பவர்கள் ஓரியன், சிரியஸ் போன்ற நட்சத்திரக் கூட்டங்களையும், தெற்கு அரைக்கோளில் வசிப்பவர்கள் கரினா, பப்பிஸ், க்ரக்ஸ் போன்ற நட்சத்திரக் கூட்டங்களையும் தெளிவாகக் காணலாம்.