''நாட்டின் உண்மையான வரலாறு குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்,'' என தமிழக கவர்னர் ரவி கூறினார்.
பாரதிய இதிகாச சங்கலன் சமிதி தமிழ்நாடு கிளை சார்பில் நாகர்கோவில் இறச்சக்குளம் அமிர்தா பொறியியல் கல்லுாரியில், ‘கன்னியாகுமரி தின விழா' நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதம் என்றால் ஆன்மிக, கலாசாரம் நிறைந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. தவறான வரலாற்று கண்ணோட்டம் இந்தியாவில் இன்னும் உள்ளது. அதை தடுக்க இதுபோன்ற அமைப்புகள் நிறைய விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். நாட்டின் உண்மையான வரலாறு குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டும்.
உலக பொருளாதாரத்தில் 30 சதவீதம் நம் நாட்டில் தான் இருந்தது. பிரெஞ்ச், டச்சு, போர்த்துக்கீசியர்கள், பிரிட்டிஷார் 150 ஆண்டுகளாக இங்கிருந்து பொருளாதாரத்தை கொள்ளையடித்து கொண்டு போய் விட்டனர். நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது, கலாசாரம் தவறாக பரப்பப்பட்டது. தற்போது உலகம், இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகிறது. பொருளாதாரம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி '2047' திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. அவர்கள் எதிர்கால இந்தியாவை கட்டமைப்பர் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.