உலகை அமைதி பாதைக்கு திருப்பும் பொறுப்பு உலக நாடுகளின் தலைவர்களிடம் உள்ளது என ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு. இந்த உலகம் முழுவதும் இணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும் என்றார்.
கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் பேரழிவுகளை ஏற்படுத்தியது. அப்போதைய உலகத் தலைவர்கள் அமைதிக்கு திரும்புதலுக்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். இப்போது உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். உலகில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு நிலவுவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவது தற்போது அவசியமாகும் என்று அவர் பேசினார்.