இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, இன்றைய வர்த்தக நேர முடிவில் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மேலும், மீண்டும் வரலாற்று உச்ச ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 65,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 19000 புள்ளிகளை கடந்து பதிவாகியுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக 4 தினங்களாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் சாதகமான சூழல் இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 486 புள்ளிகள் உயர்ந்து 65205.05 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 13.5 புள்ளிகள் உயர்ந்து 19322.5 ஆகவும் பதிவாகியுள்ளன. ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச் டி எஃப் சி வங்கி, என்டிபிசி, மஹிந்திரா, டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஏர்டெல், விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற அநேக நிறுவனங்கள் இன்று ஏற்றமடைந்திருந்தன. மாருதி சுசுகி, எல் அண்ட் டி, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி,ஹெச் சி எல் டெக், கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டைட்டன் ஆகிய நிறுவனங்கள் சரிவடைந்திருந்தன.