இனி எங்களது போராட்டம் நீதிமன்றத்தில் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர்கள் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளனர். அதில் "இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும், ஆனால் அது நீதிமன்றத்தில் இருக்கும். மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி அளித்தபடி தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன" என்று பதிவிட்டுள்ளனர்.














