இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா சபை புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானம் , இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், வரும், 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
புலிகள் அமைப்புக்கு எதிராக, 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன் வைத்து, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், 2013ல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. சர்வதேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு இலங்கை அரசு மறுத்தது. இதுபோல, 2015லும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.இதற்கிடையே, சுயமாக விசாரணை நடத்துவதாக, இலங்கை அரசு அறிவித்தது. இதை நிராகரித்து, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 2021ல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, 22 ஓட்டுகளும், எதிராக, சீனா உட்பட, 11 நாடுகளும் ஓட்டளித்தன. இந்தியா உட்பட, 14 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.இந்நிலையில், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலின் கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், வரும், 12 முதல் அக்., 7ம் தேதி வரை நடக்க உள்ளது.இதில் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல் தொடர்பான வரைவு தீர்மானம், வரும், 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மீது, அக்., 6ல் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் தொடர்பாக, ஐ.நா., புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் முந்தைய மற்றும் நடப்பு மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் மற்றும் ஊழல்களில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.இதுவே, இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாகும். இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதற்கும் இதுவே காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.