அருணாச்சல பிரதேசம் - சீனா இடையே மெக்மகோன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லைப் பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்க, சீனா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என மத்திய அரசு உறுதியாக கூறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என இருதரப்பு உறுப்பினர்களும் சேர்ந்த ஒரு தீர்மானத்தை நேற்று தாக்கல் செய்தனர்.
இதில் அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு அங்கமாக அங்கீகரித்து, அதற்கு முழு ஆதரவு அளிப்பதாக செனட் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும் அருணாச்சல பிரதேசம் - சீனா இடையே உள்ள மெக்மகோன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லைப் பகுதியாகவும் அமெரிக்கா அங்கீகரித்தது. உண்மையான எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் அத்துமீறி ஊடுருவ முயலும் சீனாவின் செயலுக்கு செனட் சபை தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.