புவியியல் பிரதேசங்களின் அடிப்படையில், வெவ்வேறு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியல்களில் இருந்து பிறந்தவையே நாட்டார் கலைகள் ஆகும். நாகரிகம் தோன்றிய காலத்திலேயே வாய்மொழி இலக்கியங்களாகப் பிறந்தவையான இவ்வகை நாட்டார் கலைகளை வைத்துதான் ஒரு சமூகத்தின் தொன்மை மற்றும் அங்கு வாழும் மக்களின் பிறப்பு, இறப்பு, மொழி, காதல், வாழ்வியல் முறைகள், அரசியல், கல்வி, பொருளாதாரம், பண்பாடு, கலாச்சார காரணிகள், மானுடவியல், இனவரைவியல், கொண்டாட்டங்கள், சோகம், மகிழ்ச்சி, வன்மம், வக்கிரம், துரோகம், வீரம் ஆகியன அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் மிகச் சிறப்பான நாட்டுப்புறக் கலை “தெம்மாங்கு பாடல்” ஆகும்.
தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பரிச்சயமானது இந்தத் தெம்மாங்கு. தேனின் இனிமையைப் போன்று பாடல் இனிமையாக இருப்பதனால் "தேன்+ பாங்கு” என்பது “தெம்மாங்கு” என மருவி வந்துள்ளது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும் சில அறிஞர்கள் “தென்+ பாங்கு” எனப் பொருள் கொண்டு, தென்னகத்தின் பாங்கான பாடல் என்றும் கூறுகிறார்கள். நாட்டுப்புறங்களில் தனி வழியே நடக்கும் போது, வண்டி ஓட்டும் போது, வயல்வெளிப் பணிகளின் போது, தொழில் செய்யும் போது, ஆநிரைகள் மேய்க்கும் போது என எந்தச் சூழ்நிலையிலும் தெம்மாங்குப் பாடல் எழலாம்.
தெம்மாங்கு பாடலும் அதன் வடிவமைப்பும் அந்தந்தப் பகுதி மக்களின் மண்ணின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும் மாறுபட்டு வந்திருக்கிறது. மலை வாழ் மக்களும் கடல்வாழ் மக்களும் சமவெளி மக்களும் இயற்கையின் சூழலைப் பாடுபொருளாக் கொண்டு பாடுகின்றனர். மேலும், சமவெளி மக்களால் அதிகம் பாடப்படும் தெம்மாங்கு பாடல் நையாண்டி கலந்ததாக அமைகின்றது. அதோடு, ஒருவரே பாடும் மரபு, ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதில் கூறும் போட்டி மரபு, ஒருவர் பாட ஏனையோர் அதனையே ஒருமித்துப் பாடும் குழுமரபு எனப் பல்வேறு மரபுகள் தெம்மாங்கில் உள்ளன. வாய்வழி இலக்கியமாக இருந்து வந்த தெம்மாங்கு, சங்க இலக்கியக் காலத்திலேயே வரி வடிவங்களாகப் பதிவு செய்யப்பட்டு விட்டது.
உதாரணமாகச் சில:
1. ஒருவர் பாடும் மரபு
● முல்லை நிலத்தில், ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆயன், மேய்ச்சல் நில வளத்தைப் பற்றிப் பாடுவதாக அமைந்த பாடல் தெம்மாங்குப் பாடலாகும்.
● குறிஞ்சி நிலத் தலைவி, மலையின் அழகு மற்றும் இயற்கையை பாடுவதாக அமைந்த பாடலும் தெம்மாங்கு வகையைச் சேர்ந்ததே ஆகும்.
2. போட்டிமரபு
● சிலப்பதிகாரத்தில் கோவலனின் கேள்விகளுக்கு மாதவி பதில் சொல்லும் வகையில் அமைந்திருக்கும் பகுதி தெம்மாங்கு வகையைச் சேர்ந்ததாகும் என அறிஞர்கள் கூறுகிறார்கள். தெம்மாங்கைப் போன்று சிலப்பதிகாரத்தில் குரவைக் கூத்து, வேலனாட்டம் போன்ற கலைகளும் இடம்பெறுகின்றன.
● முக்கூடற் பள்ளு என்ற சிற்றிலக்கியத்தின் மூல வாய்வழிப் பாடல் வடிவமாக தெம்மாங்கு கருதப்படுகிறது. அதில் ஒருவரின் கேள்விக்கு மற்றொருவர் எதிர்கேள்வி கேட்பது போல அமைந்திருக்கும் பகுதி தெம்மாங்கின் போட்டி மரபாகும்.
3. குழு மரபு
● குறிஞ்சி நிலத்தில், தலைவி தனது தோழியருடன் சேர்ந்து தினை புனம் காக்கும் சமயத்தில், தலைவி பாட, அவரது தோழியர் உடன் பாடுவது போலான பாடல், குழு மரபில் அமைந்த தெம்மாங்குப் பாடலாகும்.
இவ்வாறு, வாய்வழியாக மட்டுமே இருந்து வந்த தெம்மாங்குப் பாடல்கள், பல ஆண்டுகளுக்கு முன்னரே சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள் மூலமாக வரிவடிவம் பெற்றன. இயற்கை மற்றும் தொழில் சார்ந்த பாடுபொருள்களோடு சேர்த்து, பின்னாட்களில் தலைவன் - தலைவி காதலும் ஊடலும் தெம்மாங்கில் பெரும்பங்கு இடம்பெறத் துவங்கின. மேலும், தற்காலத்தில் தெம்மாங்கு இசையின் மாற்று வடிவமாக திரை இசை திகழ்கிறது. எண்ணற்ற திரை இசைப் பாடல்கள் தெம்மாங்கு பாடல்களின் வெவ்வேறு பரிமாணங்களாகும்.
இலக்கியம் மற்றும் திரை இசை என்று தெம்மாங்கு பரிணமித்த போதிலும், மூல வடிவில் இருக்கும் கிராமியத் தெம்மாங்கு, இன்றும் அதன் இளமை மாறாது, நாட்டுப்புறக் கலைஞர்களால் பல இடங்களில் பாடப்பட்டு வருகிறது. நாட்டுப்புற இசைத் தொகுப்புகளில் தெம்மாங்கு தனி கவனம் பெற்று இன்றும் பரவலாக இசைக்கப்படுகிறது. பல நூறு ஆண்டு கால நமது கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஒவ்வோரு தலை முறைக்கும் தெம்மாங்கின் மூலமாகவே பெரும்பாலும் கடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதும், தெம்மாங்கு பாடல்கள் மூலமாகவே நமது மண் சார்ந்த பல சரித்திர நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்பதும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. எப்போது தோன்றியது என்ற காலம் தெரியாத இந்தத் தெம்மாங்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதே இளமையோடு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.