திலகமிடுதல்

மேலை நாட்டு நாகரிகத்தால் நாம் எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருந்த போதும், இன்று வரை நம்மிடையே மாறாமல் இருப்பது நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என்றும், இலக்கிய வழக்கில் திலகம் என்றும் பொதுவாகக் கூறுவர். பொட்டு வைத்துக் கொள்ளும் மரபு 2000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்துள்ளது. சங்க காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் பொட்டு வைக்கும் வழக்கம் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில், […]

மேலை நாட்டு நாகரிகத்தால் நாம் எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருந்த போதும், இன்று வரை நம்மிடையே மாறாமல் இருப்பது நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என்றும், இலக்கிய வழக்கில் திலகம் என்றும் பொதுவாகக் கூறுவர். பொட்டு வைத்துக் கொள்ளும் மரபு 2000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்துள்ளது. சங்க காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் பொட்டு வைக்கும் வழக்கம் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன.

உதாரணமாக, திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில், "கடலணி திலகம் போலக் கதிர்திரை முளைத்த தன்றே" என்று பாடுகிறார். சூரியன் கடலில் இருந்து தோன்றும் அழகியக் காட்சியைத் திலகத்தோடு ஒப்பிடுவதில் தமிழரின் பொட்டு வைக்கும் பண்பாடு எடுத்துக் கூறப்படுகிறது. மேலும், சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம் படை வீட்டுப் பகுதியில் சூரமகளிரின் ஒப்பனைப் பற்றிக் கூறும் போது, ‘திலகம்’ என்ற சொல்லை நக்கீரர் பயன்படுத்துகிறார்.

“செங்கால் வெட்சித் சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதழ்”

என்றப் பாடல் அதை விளக்குகிறது. ஒரு பெண் தன் நெற்றியில் ‘கண் கொண்ட கொற்றவைப்’ போலத் திலகம் இட்டுக்கொண்டாள் என்பதைப் பரிபாடல், "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே, கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்." என்று கூறுகிறது. சங்க இலக்கியத்திற்குப் பின்னர் வந்த பக்தி இலக்கியக் காலம், சிற்றிலக்கியக் காலம், கம்பராமாயணம் ஆகியவற்றிலும் திலகம் இட்டுக் கொள்ளும் மரபு காணப்படுகிறது. இலக்கியங்கள் மட்டுமல்ல, சிந்துவெளியில் கிடைக்கப்பெற்றச் சிலைகளும் நெற்றியில் பொட்டு வைக்கும் மரபை உறுதிப் படுத்துகின்றன. 5000 வருடங்களுக்கு முன்பிலிருந்து இப்பொழுது வரையிலும் தொடரும் இந்த மரபின் தொன்மை வியக்கத்தக்கதாக உள்ளது.

தமிழர்கள் நெற்றியில் திலகம் வைத்துக் கொள்வதற்கு அறிவியல் காரணங்கள் உள்ளன. திருமூலர் அருளிய திருமந்திரம் பொட்டு வைக்கும் இடமான புருவ மத்தியின் சிறப்பை

“ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்குஇருக்கில்
அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடும் மன்உயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே”

என்ற பாடலில் விளக்குகிறது.

இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடத்தை ஆக்ஞா சக்கரம் என்கிறது யோகக் கலை. நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இதுவாகும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்த அறிவியல் உண்மையைக் கண்டறிந்து, அந்த இடத்தில் பொட்டு வைத்து, மனித ஆற்றலைப் பேணி வந்துள்ளனர் சிந்துவெளி மக்கள். அங்கிருந்துதான் இந்தியா முழுவதும் திலகமிடும் வழக்கம் சென்றடைந்துள்ளது. சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்றொரு கோட்பாடு இருக்கிறது. அதன் வழியே, இந்த அறிவியலுக்கும் தமிழர்களே முன்னோடி என்பது விளங்குகிறது.

பொட்டு என்பதில் பல வகைகள் இருந்தாலும் குங்குமத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. மேலும் சாந்து, சந்தனம் ஆகியவையும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தற்போது வேதியியல் முறையில் உருவாக்கப்படும் ஒட்டுப் பொட்டே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பொட்டு வைக்கும் மரபு அழியாமல் தொடர்ந்து வருகிறது என்பதே நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். இன்றையக் காலத்தில் கடைகளில் பொட்டு வாங்கப்படுகிறது. ஆனால் முந்தையத் தலைமுறை வரையிலும் வீட்டிலேயே பொட்டு தயாரிக்கப்பட்டது. பொட்டிற்குரிய சாந்து இருவகையில் தயார் செய்யப்பட்டது. காடுகளிலுள்ள கருவமரம் என்று சொல்லப்படும் முள்மரத்தின் காய்களைக் கொண்டு செய்யப்படுவது கருவப்பொட்டு ஆகும். பச்சரிசி அல்லது ஜவ்வரிசியைக் கொண்டு செய்யப்படுவது அரிசிப்பொட்டு ஆகும். பிறந்தக் குழந்தைகளுக்கு இந்த அரிசிப் பொட்டையே பயன்படுத்தி வந்தனர். எந்த விதமான வேதிப் பொருட்களும் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த வழக்கம் இப்போது அழிந்து வருகிறது. ஆனால் இன்றைய இளையத் தலைமுறையிடம் பெருகிவரும் வேதிப் பொருளில்லாப் பயன்பாடும், தொன்று தொட்டு தொடர்ந்து வரும் நம் பாரம்பரிய வழக்கமானப் பொட்டு வைத்தலும் இந்த மரபை மீட்டெடுக்கும் என நம்புவோம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu