இந்த ஆண்டு பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு 5 நாட்கள் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 7 அரசு கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகளில் 2,040 பி.எட். படிப்பு இடங்கள் உள்ளன என்று கூறினார்.
இந்த ஆண்டு 2,040 இடங்களுக்கு 5,138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பி.எட். படிப்பில் சேர அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு நவ.1ல் பணியிட மாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.