தொ.பரமசிவன்

கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்கள் மூலமாக மட்டுமே வரலாற்றுத் ...

கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்கள் மூலமாக மட்டுமே வரலாற்றுத் தொன்மங்கள் பற்றிப் பேசப்பட்டு வந்த சூழலை மாற்றி, அடித்தட்டு மக்களின் வாழ்வியல், அவர்களின் பழக்க வழக்கங்கள், நாட்டார் வழக்காற்றியல் கதையாடல்கள் மூலமாகத் தமிழர்களின் வரலாற்றைப் பதிவு செய்தவர் பேராசிரியர். தொ.பரமசிவன் ஆவார். மயிலை சீனி.வேங்கடசாமி, சி.சு.மணி, நா.வானமாமலை உள்ளிட்டோர் தொடங்கி வைத்திருந்த நாட்டார் வழக்காற்றியல் அடிப்படையிலான சமூகப் பண்பாட்டு ஆய்வுகளின் சாரத்தை, சாதாரண மனிதனும் புரிந்துக் கொள்ளக் கூடிய எளிய தொனியில் தொ.பரமசிவன் அவர்கள் எழுதியதே இன்று பலரும் தமிழர்களின் ஆணிவேர்களை உணர்வதற்குக் காரணமாக அமைகின்றது. அவரைப் பற்றிய சில தகவல்கள்:

தொ.பரமசிவன் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950ம் ஆண்டு பிறந்தார். இளம் வயது முதலே வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர், வாசிப்பின் மூலமாகவே மானுடவியலின் கருத்துகளை உள்வாங்கி, பின்னாட்களில் அதைத் தன்னுடையப் புத்தகங்கள் வாயிலாக அனைவரையும் வாசிக்கச் செய்தார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழும் படித்த அவர், இளையாங்குடி சாக்கிர் உசைன் கல்லூரி மற்றும் மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, 1976ல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக சேர்ந்தார்.

முதலில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தன்னுடைய ஆய்வுப் பொருளாக எடுக்க நினைத்தார். ஆனால், அவருடைய ஆய்வு நெறியாளர் மு.சண்முகம்பிள்ளை, கோயில்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி கூறவே, அழகர் கோயிலை தனது ஆய்வுப் பொருளாக அவர் எடுத்துக் கொண்டார். தான் ஆசிரியர்களாக ஏற்றுக் கொண்ட நா.வானமாமலை, சி.சு.மணி ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கி ஆய்வை மேற்கொண்டார். வழக்கமாக கோயில்கள் குறித்த ஆய்வில், அந்தக் கோயில் கட்டப்பட்ட விதம், அதன் வரலாறு, சம்பிரதாயங்கள் குறித்த தகவல்களே இடம்பெற்றிருக்கும். ஆனால், தொ. பரமசிவன், அழகர் கோயிலுக்கும் பல்வேறு சாதியினருக்கும் இடையிலான உறவை தனது ஆய்வாக முன்வைத்தார். அழகர் கோயிலைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று மக்களின் பண்பாட்டு அசைவுகளுடன் கூடிய ஆய்வை சமர்ப்பித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்தக் கோயில் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வு, ஆய்வு நூல்களின் எல்லைகளை விரிவடையச் செய்தது. இந்த ஆய்வு பலரால் பாராட்டப்பட்டதையடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழமே அதனைப் புத்தகமாக வெளியிட்டது. இதற்கு பின்பு தமிழர்கள் கோவிலை நோக்கும் பார்வையில் பெரிய மாற்றம் உண்டானது.

எளிய, உழைக்கும் மக்களே மொழியையும் பண்பாட்டையும் உருவாக்குகிறார்கள், வளர்க்கிறார்கள் என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. அதனைத் தன்னுடைய ஒவ்வொரு நூல்களிலும் ஆழமாகப் பதிவு செய்த அவர், அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளைக் காக்கவேண்டியதன் அவசியத்தைத் தன்னுடைய “அறியப்படாத தமிழகம்” நூலில் மிகக் கூர்மையாக முன்வைத்தார். மரபறிவின் (Traditional Knowledge) முக்கியத்துவத்தையும் தொடர்ச்சியையும் “தெய்வம் என்பதோர்”, “பரண்” “சமயங்களின் அரசியல்” போன்ற நூல்களில் சான்றுகளோடு எடுத்துரைத்துள்ளார். அவரது “மரபும் புதுமையும்” என்ற நூல், ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்டு, தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கத்தை “உரைகல்”, “விடுபூக்கள்” போன்ற நூல்கள் அனாயாசமாக எடுத்துரைக்கின்றன.
மேலும், அவருடைய பல கட்டுரைகள் பொருள்சார் பண்பாடு (Material Culture) எனப்படும் பிரிவை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன. அவரது “இதுவே சனநாயகம்”, “செவ்வி” போன்ற நூல்கள் இளையத் தலைமுறையினரிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. 1998 முதல் 2008 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய அவர் மாணவர்களிடையே தமிழர்களின் கலாச்சாரத் தொன்மம் குறித்த புரிதலைப் பெரிதும் மேம்படுத்தினார். இன்றும் பலர் இவரைத் தங்கள் மானசீக குருவாக எண்ணுகின்றனர்.

மிகச் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, அசாதாரண மாற்றங்களைத் தமிழர்களின் மனங்களில் கொண்டு வந்த இவர் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். ஆனால், தமிழகத்தின் நாட்டார் தெய்வங்களின் வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று ஆய்வுகள் என எதனை தொட்டாலும் அதில் நிச்சயமாக தொ.பவின் தடம் அழுந்த பதிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu