இந்துக்களால் சிறுபான்மையின மக்களுக்கு ஆபத்து உள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
விஜயதசமி மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிறப்பு பொதுக்கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற மலையேறும் வீராங்கனை சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டார். மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், நாட்டில் பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும். பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் அதிகாரம் பெற வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சந்தோஷ் யாதவ் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சமீப காலமாக இந்து ராஷ்டிரம் பற்றிய கருத்து குறித்து விவாதிக்கப்படுகிறது.
சிறுபான்மையினர் என அழைக்கப்படும் மக்களுக்கு எங்களால் அல்லது அமைப்பு ரீதியான இந்துக்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இது, ஆர்எஸ்எஸ் அல்லது இந்து அமைப்புகளின் இயல்பு அல்ல. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளுக்கு எப்போதுமே சகோதரத்துவம், நட்புறவு என்ற நிலைத்து நிற்கும் உறுதிப்பாடு உள்ளது. புதிய கல்வி கொள்கை மாணவர்களை பண்பட்டவர்களாகவும், தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழி வகுக்க வேண்டும்.
இது அனைவருக்குமானது. இந்த சமூகம் புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக ஆதரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறினார்.