டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்று நாட்கள் சிபிஐ காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்பு திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கழித்து ஜாமீன் முடிந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் இவரது ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் வைத்து கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்தது. இந்நிலையில் கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரிக்க ஐந்து நாட்கள் வழங்க வேண்டும் என சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்களுக்கு சிபிஐ காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது