சிங்கப்பூர் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு 3 இந்திய வம்சாவளியினர் நியமன எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இயங்கி வரும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் நிமில் ரஜினிகாந்த் பரேக், வழக்கறிஞர் ராஜ் ஜோஸ்வா தாமஸ், ப்ளூரல் ஆர்ட் பத்திரிக்கையின் இணை நிறுவனர் சந்திரதாஸ் உஷாராணி ஆகியோர் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் நியமன எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர் என கூறப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி, சிங்கப்பூர் அதிபர் ஹலீமா யாகூப் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முன்னாள் அவைத் தலைவர் தான் சுவான் ஜின் தலைமையிலான தேர்வுக்குழு, 9 பேரை நியமன எம்பிக்களாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, மேற்குறிப்பிட்ட 3 பேர் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.