அடிப்படை கட்டுமான மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்காக மர வங்கி திட்டத்தை சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
மர வங்கி திட்டத்தின் கீழ் சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் மேம்பாட்டுக்கான அமைப்புகள் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் மேம்பாட்டு பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த அமைப்புகள் மேற்கொள்ளும் திட்டப் பணிகளில் மரங்களை வேறு இடத்தில் மாற்றுவது அல்லது வெட்டுவதற்கான அவசியம் ஏற்படும் போது அந்த நிறுவனத்தால் எத்தனை மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று அதன் மர வங்கி கணக்கு ஆராயப்படும். இதன் மூலம், அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.
இது குறித்து மத்திய அரசு கூறுகையில், மர வங்கிக்குரிய மரக்கன்றுகளை நடுவதற்கு பயன்பாட்டில் இல்லாத நிலம், பாதிக்கப்பட்ட வனப்பகுதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலுக்கு ‘எகோ-டெபிட்’, பாதுகாக்கும் செயல்களுக்கு ‘எகோ-கிரெடிட்’ புள்ளிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்கான கணக்குகளை பராமரிக்க மத்திய, மாநிலங்களில் அமைப்புகள் ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளன.