கடந்த 1912 ஆம் ஆண்டு, உலகின் மிகப்பெரிய கப்பலாக சொல்லப்பட்ட டைட்டானிக் கப்பல், அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இந்த கோர விபத்தில், ஆயிரக்கணக்கான பயணிகள் உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய இந்த கப்பல் 3800 மீட்டர் ஆழத்தில் உள்ளது. தற்போது, இந்த கப்பலின் முழு ஸ்கேனிங் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முப்பரிமாணத்தில் அமைந்துள்ள இந்த காணொளியை அட்லாண்டிக் ப்ரொடக்ஷன்ஸ் மெக்கலன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் மூலம், டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கான முக்கிய காரணம் தெரிய வரும் என்று கருதப்படுகிறது. இதுவரையில் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக கருதப்பட்டு வருகிறது.
1912 ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல், 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் டைட்டானிக் கப்பலின் சில பகுதிகள் மட்டுமே புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது, ஸ்கேனிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கப்பலின் அமைப்பை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளன.