தமிழகத்தில் மாநகர பேருந்துகள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது பெரும்பாலும் நீல நிறம் மற்றும் சிவப்பு நிறங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெண்களுக்கான இலவச பேருந்துகளுக்கு அடையாளம் தெரியும் வகையில் பிங்க் நிறம் அடிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
தமிழகத்தில் ஆட்சிக்காலம் மாறும்பொழுது பேருந்தில் நிறத்தை மாற்றுவதும் தொடர்ந்து இயல்பாகவே நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பேருந்துகள் அனைத்தும் பச்சை நிறத்தில் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் அவை நீலம் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் பேருந்துகள் அனைத்தையும் மாற்றம் செய்ய திட்டம் தீட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி தமிழக அரசு போக்குவரத்து துறை ஆயிரம் புதிய பஸ்களை வாங்க நிதி ஒதுக்கியுள்ளதுடன் மிகவும் பழமையான பஸ்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் அரசு பஸ்களுக்கு அடர்த்தியான மஞ்சள் மற்றும் வெளிர்மஞ்ச நிறத்தில் மெருன் வர்ணத்தில் பட்டை மற்றும் எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.