தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான (2023) அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு வெளியிட்டிருக்கிறது. அதில் நடப்பாண்டில் அறிவிப்புகளை வெளியிட்டு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும் தேர்வு குறித்த அட்டவணையும் இடம் பெற்றுள்ளது. இதில் குரூப்-2, 2ஏ காலி பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 பணிகளுக்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு அதற்கு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, அதே ஆண்டில் மே மாதம் தேர்வு முடிவு வெளியிடப்படும். இதற்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும். சுற்றுலா உதவி அதிகாரி, ஆராய்ச்சி உதவி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆணையர், புள்ளியியல் உதவி இயக்குனர், உடற்கல்வி இயக்குனர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-2, 2ஏ, குரூப்-1 பதவிகளுக்கான புதிய அறிவிப்புகள் குறித்த தகவல்கள் இந்த அட்டவணையில் இடம்பெறவில்லை.