பௌர்ணமி நாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று 585 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று பௌர்ணமி தினம் ஆதலால் சென்னையில் இருந்தும், பிறப்பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு அதிக பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள். எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தினசரி கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுடன் 330 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுடன் 225 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இவை மட்டுமின்றி அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை குளிர்சாதன வசதி கொண்ட 30 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன. பயணிகள் www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது