இணைய வழியில் கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் ஆகியவற்றை பயன்படுத்த டோக்கனைசேஷன் முறை கட்டாயப்படுத்தப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இணைய வழிப் பரிவர்த்தனைகளில், பண அட்டையின் பாதுகாப்பு, உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றை, அதன் சிவிவி எண் கொண்டு அடையாளப்படுத்துவர். இந்த முறைக்கு மாற்றாக, தற்போது, ஒவ்வொரு கார்டுக்கும் பிரத்தியேகமாக டோக்கன் எண் வழங்கப்படும். இது அட்டையின் விவரங்கள் மற்றும் டோக்கனைசேஷனை மேற்கொள்ளும் நிறுவனத்தின் விவரங்கள் ஆகியவற்றின் கூட்டுத் தொகுப்பாக இருக்கும். ஒரு பண அட்டையை டோக்கனைசேஷன் செய்து விட்டால், அந்த அட்டையின் விவரங்களை, வணிகர்களோ, பணப் பரிமாற்ற செயலிகளோ, இணையதள விற்பனை நிலையங்களோ சேமித்து வைக்க முடியாது. குறிப்பாக, அட்டையின் சிவிவி எண், அட்டை காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை சேமிக்க முடியாது. இதனால், இணையம் வாயிலான பண மோசடிகள் தவிர்க்கப்படும். அத்துடன், இந்த டோக்கன் எண் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, டோக்கனைசேஷன் முறை பாதுகாப்பான இணைய பண பரிவர்த்தனையை உறுதி செய்வதாக கூறப்படுகிறது. கார்டுகளை டோக்கனைஸ் செய்வதற்கு, தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது. வாடிக்கையாளர்கள் தங்களது அட்டைக்கான நிதி நிறுவனம் அல்லது வங்கி போன்றவற்றைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கடந்த ஜூலை மாதம் முதலே அமல்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் வணிகர்கள் தரப்பில் இருந்து, இந்த செயல்பாட்டு முறைக்கு மாறுவதற்கு கால அவகாசம் கோரப்பட்டதால், தற்போது, அக்டோபர் ஒன்றாம் தேதி முறை முதல் கட்டாயமாகச் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.