கடந்த 3 நாட்களில் தக்காளி விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது.
கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு பகுதியில் இருந்து தக்காளி வரத்து உள்ளது. அங்கிருந்து தக்காளியை சில்லரை வியாபாரிகள் வாங்கி கடைகளில் விற்பனை செய்கின்றனர். இந்த மார்க்கெட்டில் 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை ரூ.450 முதல் ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.900 முதல் ரூ.1,000க்கு விற்பனையானது. இதனால், கடைகளில் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் ரூ.60க்கு விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து எம்.ஜி.ஆர் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு பொதுவாக 20 முதல் 30 வண்டிகளில் தக்காளி வரும். ஒரு வண்டியில் 400 பெட்டிகள் இருக்கும். ஆனால், தற்போது 10-க்கும் குறைவான வண்டிகள் தான் வருகிறது.
மூன்று நாட்களில் ஒரு பெட்டிக்கு ரூ.150 வரை விலை அதிகரித்துள்ளது. நாட்டு தக்காளி பெட்டி ரூ.850 முதல் ரூ.900க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு தீபாவளி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து வரவுள்ள பண்டிகைகள் மற்றும் முகூர்த்த தினங்கள் காரணமாக அடுத்த சில நாட்களில் தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளன. கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.