உக்ரைன் - ரஷ்யா போரின் போது, உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் உதவி உள்ளன. இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியுலகத்திற்கு கசிந்துள்ளது. இந்த ரகசிய ஆவணங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
போர் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய படங்கள், ஆயுதங்கள் விநியோகம், ராணுவத்தின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்கள் மூலம் கசிந்துள்ளன. உக்ரைன் நாட்டிடம் உள்ள டாங்கிகளின் விவரம், கனரக ஆயுதங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களும் கசிந்துள்ளன. ஆனால், இவை 5 வாரங்களுக்கு முந்தைய தகவல் என கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் நாட்டின் 12 போர் படை பிரிவுகளின் பயிற்சி அட்டவணைகள் கசிந்துள்ளது. அதன்படி, படைப்பிரிவுகளில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள், அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளால் பயிற்சி பெற்றவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.