டிசம்பர் இறுதிக்குள் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கன்னியாகுமரி கடல் நடுவில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. உப்பு காற்றினால் சிலை பாதிக்கப்படும். இதனால் திருவள்ளுவர் சிலையின் தன்மை பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 வருடங்களுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரம் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது தொடர் மழையின் காரணமாக பணி நிறுத்தப்பட்டது. மழை குறைந்த பிறகு மீண்டும் பராமரிப்பு பணிகள் தொடங்கும். எனவே டிசம்பர் இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.