கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் வர்த்தகம், ஏற்றுமதி தகவல் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பன்னாட்டு வர்த்தக நிதி சேவை தளம் குறித்த குழுக் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், நாட்டின் குறு, சிறு நடுத்தர தொழில்துறையில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே 3-வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்த சாதனைகளுக்கு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்கள்தான் உறுதுணையாக உள்ள பெரும் தொழிற்சாலைகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் உள்ள ஏற்றுமதி மையங்களை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்றுமதி குறித்த ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மதுரை ஆகிய 4 இடங்களில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி தகவல் மையங்கள் அமைக்க ரூ.16 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.