தமிழ்நாட்டில் உள்ள 25 உழவர் சந்தைகளில், தொன்மை சார் உணவகங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், “2024 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 21ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் உருவாக்கப்படும். அந்த உணவகங்களில், மூலிகை சூப், சிறுதானிய கூழ், பாரம்பரிய உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இதன் மூலம், தொன்மை சார் உணவுகள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், இந்த உணவகங்களில் புவிசார் குறியீடு பெற்ற உணவுகள் விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, நீலகிரி, வேலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், திருப்பூர், தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உணவகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் காலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.