சென்னையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல் ஆகும். அவசர வேளைகளில் சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது, சிக்னலை மாற்றி வழிவிடவேண்டும். போக்குவரத்து போலீசார் அருகில் இல்லாதபோது, சிக்னலை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இதுபோன்ற நேரத்தில் ரிமோட் மூலம் சிக்னலை உடனே மாற்றி விடலாம். அதனால் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து, சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் நவீன வசதியும் வரப்போகிறது என்று அவர் கூறினார்.