இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், கைபேசி அழைப்புகளில், அழைத்தவரின் பெயரைக் காட்டும் அம்சத்தை கொண்டு வருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டிராய் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த கருத்து கேட்பு நடத்தப்படுகிறது. வரும் டிசம்பர் 27ம் தேதி வரை பங்குதாரர்களின் கருத்துக்களும், ஜனவரி 10ம் தேதி வரை அனைத்து தரப்பினரும் கருத்துக்களும் பதிவு செய்யப்பட அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கைப்பேசிகளில் அழைத்தவரின் பெயரை காட்டும் அம்சத்தின் மூலம், ஒருவரின் கைபேசியில் தொலைபேசி எண் பதிவு செய்யப்படாவிட்டாலும், அழைத்தவரின் பெயர் காண்பிக்கப்படும். இதன் மூலம், ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளைத் தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், இந்த சேவைகளைப் பெற, ‘ட்ரூ காலர்’ மற்றும் ‘பாரத் காலர் ஐடி அண்ட் ஆன்ட்டி ஸ்பேம்’ ஆகிய செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.