தமிழகம் முழுவதும் ஐபிஎஸ்கள் உட்பட 21 காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உள்துறை செயலர் கே.பணீந்திர ரெட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி கருணாசாகர், காவலர் நலன் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் ரோஹித் நாதன் ராஜகோபால், அண்ணா நகர் துணைஆணையராகவும், மாநில குற்ற ஆவணக் காப்பக எஸ்.பி. மெகலினா ஐடென், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாகவும், மதுரை தலைமையிடத்து துணைஆணையர் ஜி.வனிதா, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் தலைமையிடத்து துணை ஆணையர் எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை காவல் துறை தலைமையிடத்து துணைஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சாம்சன், தென்காசி எஸ்.பி.யாகவும், அந்த பதவியில் இருந்தஎஸ்.ஆர்.செந்தில்குமார்,சென்னை அமலாக்கத்துறை எஸ்.பி.யாகவும், இப்பதவியில் இருந்த மகேஸ்வரன், சென்னைபொருளாதார பிரிவு தலைமையிடத்து எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. ஆஷிஷ் ராவத்,தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.யாகவும், அங்கிருந்த ஜெ.முத்தரசி சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாகவும், சென்னை காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வராக இருந்த எஸ்.செல்வராஜ், சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாகவும், சென்னை தலைமையிடத்து டிஐஜி எம்.மனோகர், சென்னை மேற்கு மண்டல சட்டம் - ஒழுங்கு இணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அபிஷேக் தீக்ஷித், சென்னை தலைமையிடத்து டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.