இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனை ஒட்டி, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், திரிபுரா மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, திரிபுரா எல்லையில் உள்ள 75 கிராமங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளன. வரும் ஜூலை மாதம் முதல் சுதந்திர தினம் வரை பெயர் சூட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என திரிபுரா மாநில தகவல், கலாச்சார துறை செயலர் பி கே சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், திரிபுரா மாநிலத்தின் 8 மாவட்டங்களில் உள்ள 75 கிராமங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கிராமங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறும் போது, குறிப்பிட்ட பெயரை உடைய சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்தினர் கௌரவிக்கப்படுவார்கள் என்று திரிபுரா மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகம் மக்களுக்கு எடுத்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்த திட்டத்திற்காக, 3.13 கோடி ரூபாய் அளவிலான நிதி, மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளதாக திரிபுரா மாநில அரசு கூறியுள்ளது.