பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதற்காக, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கனடாவில் 1.8 மில்லியன் குழந்தைகள் சரியான உணவு இல்லாமல் பள்ளிக்கு வந்து செல்வதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து, தேசிய அளவில் பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், 4 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம் கனடாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 21% குழந்தைகள் பயனடைகின்றனர். இந்த திட்டம் சத்தான உணவு வழங்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட உள்ளதால், அனைத்து குழந்தைகளும் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்காக 1 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.